×

புதிய பாலங்கள் கட்டும் வேலை துவக்கம் அம்பையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

 

அம்பை, ஏப்.27: அம்பை நதியுண்ணி கால்வாயின் குறுக்கே கிருஷ்ணன் கோயில் அருகிலுள்ள பாலம் மற்றும் தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள பாலம் ஆகிய 2 சிறிய பாலங்களும் அகற்றப்பட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்கவுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து மாற்றி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் அம்பை காவல் நிலையத்தில் டிஎஸ்பி (பொ) வெங்கடேஷன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தென்காசி கோட்ட மேலாளர் சண்முகம், பாபநாசம் கிளை மேலாளர் சுரேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் விஷ்ணுவர்த்தன், இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்குமார், சுஜித்ஆனந்த், நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சிதம்பர ராமலிங்கம், விவசாயிகள் சங்கத்தினர், பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் புதிய பாலப்பணிகள் நடைபெறும் 2 மாதத்திற்கு போக்குவரத்தை மாற்றி அமைப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழங்கப்பட்ட செய்திக்குறிப்பில், இன்று (27ம்தேதி) முதல் கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரம் வரும் கார், ஆட்டோ, பைக் போன்ற இலகுரக வாகனங்கள் கல்லிடை-அம்பை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை அடுத்துள்ள பாலத்தடி இசக்கி அம்மன் கோவில் வழியாக திரும்பி காசிநாதர் கோவில் முன்பாக சென்று அம்பை ஆற்றுச்சாலை வழியாகவும், முக்கூடலில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் தீர்த்தபதி பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதை வழியாகவும் நகருக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்லிடைக்குறிச்சி வழியாக அம்பாசமுத்திரம் வரும் அரசுப் பேருந்துகள் கிருஷ்ணன்கோவில் அருகே அமைக்கப்படும் திடல் வரை வந்து திரும்பிச் செல்லும். பாபநாசம், தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் வள்ளியூர், நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் வாகைக்குளம் விலக்கு வழியாக வந்து அம்பை யூனியன் அலுவலகம் முன்பாக திரும்பி இடைகால், பாப்பாக்குடி வழியாகச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post புதிய பாலங்கள் கட்டும் வேலை துவக்கம் அம்பையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Ambai ,Krishna temple ,Ambai Nadiyunni canal ,Tirthapati High School ,Dinakaran ,
× RELATED அம்பை அருகே பெண்ணிடம் நகை பறித்த இருவர் கைது